திருமணம் செய்வதாக அழைத்துச் சென்று 7 மாத கர்ப்பிணி காதலியை கொலை செய்த காதலன் கைது
எடப்பாடி, 04 செப்டம்பர் (ஹி.ச) சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் அருகே வசித்து வந்த கோகிலா (23), திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் சாக்குப்பையில் கட்டப்பட்ட நிலையில் க
Sl


எடப்பாடி, 04 செப்டம்பர் (ஹி.ச)

சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் அருகே வசித்து வந்த கோகிலா (23), திடீரென மாயமானார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் சாக்குப்பையில் கட்டப்பட்ட நிலையில் கோகிலாவின் சடலம் மீட்கப்பட்டது.

கோகிலாவின் கர்ப்பத்திற்கு காரணமானதாக கூறப்படும் அம்மாசி (26), அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அவர் காணாமல் போனதாக பெற்றோரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அம்மாசியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோகிலாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை சாக்குப்பையில் கட்டி விவசாயக் கிணற்றில் வீசியதாகவும் அம்மாசி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அம்மாசியை கொங்கணாபுரம் போலீசார் கைது செய்தனர். கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ