Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 04 செப்டம்பர் (ஹி.ச.)
தெலங்கானா அரசியலில் பரபரப்பு
தெலங்கானா அரசியலில் எதிரும் புதிருமான சவால்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிதாக ‘தெலங்கானா ரக்ஷண சேனா’ கட்சியை தொடங்கியுள்ள கல்தகுந்த்ல கவிதா, பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹரீஷ் ராவை கடுமையாக விமர்சித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது அறிக்கையில் அவர் கூறுகையில்:
வருகிற சட்டமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அவர்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறிய கவிதா, “தைரியம் இருந்தால் ஹரீஷ் ராவ் தனது மனைவியை எனக்கு எதிராக தேர்தலில் போட்டியிட வைக்கட்டும்” என்று சவால் விடுத்தார்.
ஹரீஷ் ராவ் நேரடியாக தேர்தல் களத்தில் இறங்காமல், பின்னணியில் இருந்து அரசியல் செய்து வருவதாகவும் கவிதா குற்றம் சாட்டினார்.
தேவைப்பட்டால் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனது மனைவியை தேர்தலில் நிறுத்தலாம் என்றும், அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டாலும் அதை வரவேற்பதாகவும் கவிதா தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த காலத்தில் சித்திபேட்டை தொகுதியில் ஹரீஷ் ராவை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று தான் கூறியதை கவிதா நினைவுபடுத்தினார்.
வரும் தேர்தலில் சித்திபேட்டை அல்லது போதன் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் பதவி மீது ஆசை
மேலும், தனது அரசியல் எதிர்காலம் குறித்தும் கவிதா வெளிப்படையாக பேசினார். தெலங்கானா மாநிலத்தின் முதல்-அமைச்சராக வேண்டும் என்பது தனது விருப்பம் என்று கூறிய அவர், அந்த பதவிக்கு கண்ணியமும், மரியாதையும் மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.
பா.ஜ.க.வுடன் ரகசிய உடன்பாடு
ஹரீஷ் ராவ் பா.ஜ.க.வுடன் ரகசிய அரசியல் உடன்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் கவிதா குற்றம் சாட்டினார். அவரது இந்த கருத்துகள் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA