Enter your Email Address to subscribe to our newsletters

லண்டன் , 04 செப்டம்பர் (ஹி.ச.)
இங்கிலாந்தை சேர்ந்த கிளப் கிரிக்கெட் வீரர் சாம் போடோனோ (22), 100 கி.மீ. தூரம் ஓடி வந்து கிரிக்கெட் போட்டியில் முதல் பந்தை வீசி புதிய சாதனை படைத்துள்ளார்.
சர்ரே மாகாணத்தில் கில்ட்போர்டு அருகே உள்ள வார்பிளஸ்டன் பகுதியை சேர்ந்த சாம் போடோனோ, கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக நீண்ட தூரம் ஓடி வந்து பந்துவீசியவர் என்ற சாதனையை படைக்கும் நோக்கில், கடந்த சனிக்கிழமை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து தனது 100 கி.மீ. ஓட்டத்தை தொடங்கினார்.
கிரிக்கெட் வெள்ளை சீருடை அணிந்தபடியும், கையில் கிரிக்கெட் பந்தை ஏந்தியபடியும் அவர் ஓட்டத்தை மேற்கொண்டார்.
சுமார் 14 மணி நேரம் தொடர்ந்து ஓடிய அவர், மறுநாள் வேலி எண்ட் கிரிக்கெட் கிளப்பை சென்றடைந்தார்.
அங்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சாம் போடோனோ பங்கேற்றார்.
100 கி.மீ. ஓட்டத்தை நிறைவு செய்த களைப்பு இருந்தபோதிலும், போட்டியின் முதல் பந்தை அவரே வீசினார். இதன் மூலம் மிக நீண்ட தூரம் ஓடி வந்து கிரிக்கெட் போட்டியில் பந்துவீசியவர் என்ற சாதனையை சாம் போடோனோ படைத்துள்ளார்.
100 கி.மீ. தூரத்தை ஓடி முடித்த மறுநாளே கிரிக்கெட் போட்டியில் களம் இறங்கி முதல் பந்தை வீசிய சம்பவம், அவரது உடல் வலிமையையும் மன உறுதியையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA