Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை பரங்கிமலையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில்
(Officers Training Academy - OTA) ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று காலை முதல் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
கடந்த பல மாதங்களாக கடுமையான ராணுவ பயிற்சியை முடித்த 300-க்கும் மேற்பட்ட இளம் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்று பயிற்சியை நிறைவு செய்கிறார்கள்.
இந்த நிறைவு விழாவையொட்டி அகாடமி வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த முறை பயிற்சி நிறைவு செய்பவர்களில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி, நட்பு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.
தான்சானியா, உகாண்டா, ஜிம்பாப்வே, பூட்டான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் தங்களது பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இது இந்திய ராணுவத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பயிற்சித் தரத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இன்றைய விழாவின் முக்கிய நிகழ்வாக பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
சீருடையில் கம்பீரமாக அவர்கள் அணிவகுத்துச் செல்லும் நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அணிவகுப்பை உயர் ராணுவ அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகளின் குடும்பத்தினர் என பலரும் கண்டு ரசிக்க உள்ளனர்.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இந்த இளம் அதிகாரிகள், இனி இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் முக்கிய பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.
நாட்டின் பாதுகாப்புப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள அவர்கள் தயாராகி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b