Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 05 செப்டம்பர் (ஹி.ச.)
ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவோம் என வாக்குறுதி அளித்தவர்கள், தற்போது அதற்கு நேர்மாறாகப் பேசத் தொடங்கியுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு நல்ல காரியம் நடைபெற வேண்டுமென்றால் சிலவற்றை இழந்தாகத்தான் வேண்டும் என்றும், அரசுக்கு கிடைக்கும் ரூ.55,000 கோடி வருவாய் இழப்பை ஏற்க மனமில்லாமலும், டாஸ்மாக் கடைகளை மூடத் துணிவில்லாமலும் அரசு திண்டாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் உற்பத்தி முதல் காலி மதுபாட்டில் விற்பனை வரை பல்வேறு நிலைகளில் ஊழல் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டிய அவர், ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது மட்டும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடை வாடகை, மின்கட்டணம், துப்புரவுப் பணி உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளையும் அரசு தீர்க்க வேண்டும் என்றும், அவற்றைத் தீர்க்காமல் சில்லறைப் பிரச்சினைகளுக்காக ஊழியர்களை இடைநீக்கம் செய்வது தீர்வாகாது என்றும் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மதுபானம் தனிநபரின் உடல்நலம், குடும்பம், சமூகம் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ஊழலுக்கும் வழிவகுக்கும் முக்கிய காரணியாக இருப்பதாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
எனவே, டாஸ்மாக்கை முற்றாக விட்டொழிப்பதே சரியான தீர்வு என்றும், மக்கள் நலனை முன்னிறுத்தி டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற நிலைப்பாட்டை கைவிடுங்கள் என்றும் விஜய் அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P