Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 05 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலத்தில் கல்வித்துறையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருவதாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஆசிரியர்களின் பதவி உயர்வுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கொத்தங்கல் அரசு ஜூனியர் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்டு ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-
பெற்றோருக்கு இணையாக குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைப்பவர்கள் ஆசிரியர்கள்.
ஆசிரியர்களின் பிரச்சினைகள் அனைத்தும் சுமுகமான முறையில் தீர்க்கப்படும். எனக்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கினால், ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்த்து காட்டுவேன்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஆசிரியர்களின் பதவி உயர்வுகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான விஷயங்களிலும் அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன். மாணவர்களின் எதிர்காலத்திற்கு தொழில்நுட்பக் கல்வி முக்கியமானது. எனவே, தொழில்நுட்பக் கல்விக்கு அரசு அனைத்து வகையிலும் தேவையான ஒத்துழைப்பை வழங்கும். பாலிடெக்னிக் கல்வி முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
கல்வித்துறை கமிஷன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததும் பி.ஆர்.சி. (ஊதிய திருத்தக் குழு) தொடர்பான பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டது. சமீபத்தில் இந்திரா பூங்கா அருகே ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியது தனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை சுமுகமான முறையில் தீர்க்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பார்வையிட்டார்.
பின்னர் ஆசிரியர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA