Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 05 செப்டம்பர் (ஹி.ச.)
ஆசிரியர்களின் கண்ணீர் எந்த நாட்டுக்கும், எந்த மாநிலத்துக்கும் நல்லதல்ல என்று மத்திய மந்திரி பண்டி சஞ்சய் குமார் கூறியுள்ளார்.
ஆசிரியர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அரை வயிற்றுடன் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க பாடுபட்டு வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கானாவில் ஊதிய திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படாத நிலையிலும், அகவிலைப்படி வழங்கப்படாத நிலையிலும் ஆசிரியர்கள் பொறுமையுடன் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
பள்ளியையே தங்களது வாழ்க்கையாக கருதி மெழுகுவர்த்தியைப்போல் தங்களை அர்ப்பணித்த ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், ஓய்வுக்கால பலன்கள் கிடைக்காமல் வயதான காலத்திலும் அரசு அலுவலகங்களைச் சுற்றி வருவது வேதனை அளிக்கிறது.
முதலமைச்சரே கல்வித்துறையை கவனித்து வரும் நிலையில், ஆசிரியர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குக்கூட தீர்வு காணப்படாதது கண்டனத்துக்குரியது.
காங்கிரஸ் அரசு இனியாவது ஆசிரியர்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதை நிறுத்திவிட்டு, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையே முதல் கடமையாக கொள்ள வேண்டும்.
ஆசிரியர் தினத்திலாவது ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள பணப்பலன்கள் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரசு தெளிவான உறுதி அளிக்க வேண்டும். அதுவே ஆசிரியர் சமூகத்திற்கு அளிக்கும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
இவ்வாறு பண்டி சஞ்சய் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA