Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும், கட்சியை மீண்டும் வலுவான இயக்கமாக மாற்றுவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், ஒன்றியம், நகரம், பேரூர், வட்டம் மற்றும் கிராம அளவில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை அதிகளவில் நடத்த வேண்டும் என்றும், மக்களிடம் தொடர்ந்து சென்று கட்சியின் நிலைப்பாடுகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் இன்னும் சுமார் ஆறு மாத காலம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் கூட்டத்தில் அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam