திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - சர்வ தரிசனத்துக்கு 24 மணி நேரம் வரை காத்திருப்பு
திருமலை , 06 செப்டம்பர் (ஹி.ச.) வார இறுதி விடுமுறையையொட்டி திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளெக்ஸில் உள்ள அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பியுள்ளன. பக்தர்களின் நீண்ட வரிசை
A


திருமலை , 06 செப்டம்பர் (ஹி.ச.)

வார இறுதி விடுமுறையையொட்டி திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளெக்ஸில் உள்ள அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பியுள்ளன. பக்தர்களின் நீண்ட வரிசை கியூ காம்ப்ளெக்ஸை கடந்து பாட்ட கங்கம்மா கோவில் வரை நீண்டுள்ளது.

கூட்டம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்துக்கான வரிசையில் நுழையும் பக்தர்களுக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய சுமார் 20 முதல் 24 மணி நேரம் வரை ஆகும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 4 முதல் 6 மணி நேரமும், சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு 5 முதல் 7 மணி நேரமும் தரிசனத்துக்கு ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் நிலவும் கூட்டத்தின் தீவிரத்தை சனிக்கிழமை பக்தர்கள் வருகை புள்ளிவிவரங்களும் எடுத்துக்காட்டுகின்றன.

ஒரே நாளில் 84 ஆயிரத்து 166 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.

இவர்களில் 36 ஆயிரத்து 673 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

மேலும், பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மூலம் சுவாமி உண்டியலில் ரூ.4 கோடியே 8 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

பக்தர்களின் அதிகரித்த வருகையை கருத்தில் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 லட்சத்து 74 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வார இறுதி விடுமுறை காரணமாக தொடர்ந்து பக்தர்கள் அதிக அளவில் திருமலைக்கு வருவதால், தரிசனத்துக்கான காத்திருப்பு நேரமும் அதிகரித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA