Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா , 06 செப்டம்பர் (ஹி.ச.)
பீகாரில் பெய்து வரும் கனமழையால் கங்கை மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், சுமார் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேபாளத்தை ஒட்டியுள்ள பீகார் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கங்கை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கங்கை ஆற்றின் கிளை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் தலைநகர் பாட்னா, போஜ்பூர், சரன், வைஷாலி, பாகல்பூர், பெகுசராய், புக்சர், சமஸ்திபூர், முன்கர், கதிகார் மற்றும் அரரியா ஆகிய 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் உள்ள 330 கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் சுமார் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் (NDRF) தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA