Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 06 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி இரண்டு குழந்தைகள் சடலமாக இருப்பது கண்டறிந்து மீட்கப்பட்டது.
இது குறித்து எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் ஆலங்காயம் போலீஸார் மற்றும் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்பகுதியில் யாரேனும் சிறுவர்கள் காணாமல் போய் உள்ளாா்களா? என்பது பற்றியும் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், இறந்த குழந்தைகள், திருவண்ணாமலை ஜமுனாமரத்தூர் அடுத்த வெளிச்சனூர் பகுதியைச் சேர்ந்த சிவகாமியின் (26) குழந்தைகள் பிரதாப் (5), பிரேம்குமார்(2) என்பது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர், ஆலங்காயம் போலீஸார் இறந்த குழந்தைகளின் தாயை தேடிச் சென்ற போது அப்பகுதியை சோ்ந்த பொக்லைன் ஓட்டுநர் ராஜா(35) என்பவருடன் சிவகாமி தகாத உறவு வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த இருவரையும் பிடித்து வந்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சிவகாமி தனது கணவர் சேட்டு என்பவரிடம் வாழாமல் தனியாக வசித்து வந்தபோது ராஜாவுடன் முறையற்ற தொடா்பு ஏற்பட்டது.
பிறகு நாளடைவில் முறையற்ற தொடர்புக்கு சிவகாமியின் 2 குழந்தைகளும் இடையூறாக இருந்ததால் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி அவா்களை அழைத்துக் கொண்டு ஆலங்காயம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ராஜா உடன் வந்துள்ளார்.
இந்த நிலையில், ஆள் நடமாட்டம் குறைவான பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் சிவகாமி தனது இரு குழந்தைகளையும் வீசி விட்டு சென்றது தெரியவந்தது.
இது குறித்து ஆலங்காயம் போலீஸார் கொலை வழக்காக மாற்றி சிவகாமி, ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Hindusthan Samachar / vidya.b