Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச)
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) சார்பில், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி முதல்நிலை படிப்புதவித் தொகை தேர்வு-2026 இன்று (செப். 6) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கும் நோக்கில் நடத்தப்படும் இத்தேர்வுக்கு, மாநிலம் முழுவதும் 25,771 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக தமிழகம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதன்படி, இன்று நடைபெற்ற தேர்வில் 6,157 தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையங்களுக்கு வருகை புரிந்து தேர்வெழுதினர். அதே நேரத்தில், விண்ணப்பித்திருந்தவர்களில் 19,614 பேர் தேர்வெழுத வரவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு மையங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்வு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று நடைபெற்ற குடிமைப்பணி முதல்நிலை படிப்புதவித் தொகை தேர்வு-2026 தொடர்பாக இதுவரை எந்தவித புகாரும் பெறப்படவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படும் இந்தத் தேர்வின் மூலம் குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் தகுதியான மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ