Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச)
நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரயில்வேயில் பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அதன்படி நவம்பர் மாத தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையை கொண்டாட திட்டமிட்டுள்ள ஏராளமானோர் ஒரே நேரத்தில் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்ய முயன்றனர்.
இதன் காரணமாக இணையதளத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டதுடன், சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து புறப்படும் பெரும்பாலான விரைவு ரயில்களில் இருக்கைகள் சில நிமிடங்களில் நிரம்பி, காத்திருப்பு பட்டியலுக்கு சென்றுவிட்டன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு மிக வேகமாக முடிவடைந்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிக்கெட் கிடைக்காத பயணிகள் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நவ.6 ஆம் தேதி பயணத்துக்கு திங்கள்கிழமை (செப்.7) காலை 8 மணிக்கும், நவ.7 ஆம் தேதி பயணத்துக்கு செவ்வாய்க்கிழமை (செப்.8) காலை 8 மணிக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Hindusthan Samachar / vidya.b