Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 06 செப்டம்பர் (ஹி.ச)
புதுக்கோட்டை மாவட்டம் மேலூர் மற்றும் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமங்களில் கடந்த 16 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நேற்று மாலை புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று மாலை 5 மணி அளவில் கிளியூர், பாரப்பட்டி, தொடையூர் உள்ளிட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பிறகும் இன்று காலை வரை மின் இணைப்பு சீரமைக்கப்படவில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி தவித்துள்ளனர். குழந்தைகள், முதியவர்கள் தூக்கமின்றி அவதிப்பட்டதாகவும், குடிநீர் இறைக்க முடியாமலும், மின்விசிறி இன்றி புழுக்கத்தில் தவிப்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நீண்ட நேர மின் தடை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடியாக மின் கோளாறை சரிசெய்து மின்சாரத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b