Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 06 செப்டம்பர் (ஹி.ச.)
மழையில் நனைந்து நெல் மணிகள் வீணாகும் நிலையைத் தடுக்க, விவசாயிகளிடமிருந்து நெல்லை உடனடியாக அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல், அரசு நேரடி கொள்முதல் செய்யாததால் சாலையோரங்களிலும் திறந்தவெளிகளிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பின்றி திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மழையில் நனைந்து முளைத்தும், அழுகியும் பெரும் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகளிடம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்வதுடன், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்லை பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்ற வேண்டும் என்றும், மழையால் நெல் சேதமடையாமல் தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு கொள்முதல் செய்யும் நெல்லுக்கான தொகையை விவசாயிகளுக்கு எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக வழங்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் உழைப்பை அலட்சியப்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அரசின் முதன்மையான கடமை.
எனவே, தமிழக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ