Enter your Email Address to subscribe to our newsletters

சித்ரகூட், 06 செப்டம்பர் (ஹி.ச.)
உத்தரப் பிரதேசத்தில் தொடர் மழையால் சித்ரகூட்டில் மந்தாகினி நதி இதுவரை இல்லாத அளவுக்கு பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் ராம்காட் மற்றும் உத்தரப் பிரதேசம் - மத்தியப் பிரதேச எல்லையை ஒட்டிய பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த 23 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ள இந்த நதி, கடைகள், கோயில்கள் மற்றும் மடங்களை மூழ்கடித்துள்ளதுடன், பல சாலைகள் நீர்வழிகளாக மாறியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் 31 மாவட்டங்களில் வெள்ளம் போன்ற சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அயோத்தி, பதாயூன், சந்தௌலி, சித்ரகூட், பரூக்காபாத், ஆசம்கர், பல்லியா, பாராபங்கி, காசிப்பூர், கோரக்பூர், ஹாப்பூர், ஹர்தோய், காஸ்கஞ்ச், லக்கிம்பூர் கேரி, மிர்சாபூர், மொராதாபாத், பிரயாக்ராஜ், சந்த் கபீர் நகர், ஷாஜகான்பூர், சீதாபூர், உன்னாவ் மற்றும் வாரணாசி உள்ளிட்ட மாவட்டங்கள் இதில் அடங்கும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சித்ரகூட் பகுதியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு நிவாரணப் பணிகளை பார்வையிடுகிறார்.
தொடர் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மதிப்பீடு செய்ய உள்ளார்.
புனிதத் தலமான சித்ரகூட்டில், ஸ்ரீ காமதநாத்ஜியுடன் தொடர்புடைய இப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்கும் முதலமைச்சர்
பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்வுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 800 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க உள்ளார்.
மேலும், வெள்ளத்தால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான நில ஒதுக்கீட்டுச் சான்றிதழ்களும், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி உதவியும் வழங்கப்படும்.
இது குறித்து முதலமைச்சர் யோகி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த நெருக்கடியான நேரத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உதவி சென்றடைவதை உறுதி செய்வதும், வீடற்ற ஒவ்வொருவருக்கும் மறுவாழ்வு அளிப்பதும், துயரத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆதரவளிப்பதும் இரட்டை என்ஜின் அரசின் மிக உயர்ந்த முன்னுரிமை என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b