Enter your Email Address to subscribe to our newsletters

இந்தோனேசியா, 06 செப்டம்பர் (ஹி.ச.)
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் முதன்மை விமான நிலையமான சூக்கர்னோ-ஹத்தா சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அனக் கிரகடோவா எரிமலையின் தொடர் வெடிப்பால் வெளியேறிய எரிமலை சாம்பல் மேகங்கள் விமான நிலையப் பகுதியை சூழ்ந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், முன்னதாக திட்டமிடப்பட்ட சேவை நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுவதாகவும், இன்று காலை உள்ளூர் நேரப்படி 9:30 மணி வரை அனைத்து விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் சர்வதேச வழித்தடங்கள் உட்பட 33-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன, சில விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு தனது தற்போதைய சீற்றத்தைத் தொடங்கிய அனக் கிரகடோவா எரிமலை, இன்று அதிகாலைக்குள் அதன் சாம்பலை ஜகார்த்தா வான்பரப்பு வரை கொண்டு வந்து சேர்த்தது. இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகமும் இந்த நிலைமையை உறுதிப்படுத்தியுள்ளது.
எரிமலை சாம்பல் மேகங்கள் விமான எந்திரங்களுக்கு மிகவும் ஆபத்தானவை என்பதால், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பயணிகள் தங்கள் விமான நிலை குறித்து விமான நிறுவனங்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, இந்த எரிமலை வெடிப்பால் உடனடியாக சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்று இந்தோனேசிய பேரிடர் தணிப்பு முகமை தெரிவித்துள்ளது.
இருப்பினும், எரிமலையின் செயல்பாடு தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சாம்பல் பரவலின் தன்மையை பொறுத்து விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b