AI, டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஸ்ருதி ஹாசன் வழக்கு – மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலப் பாதுகாப்பு
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசனின் தனிநபர் உரிமைகள் மற்றும் டிஜிட்டல் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த
Shruthi


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசனின் தனிநபர் உரிமைகள் மற்றும் டிஜிட்டல் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலி வீடியோக்கள், டீப்ஃபேக் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட உள்ளடக்கங்களில் தனது உருவம், குரல் மற்றும் தனிப்பட்ட அடையாளங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக ஸ்ருதி ஹாசன் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,

மனுவில் சுட்டிக்காட்டப்பட்ட குறிப்பிட்ட போலியான மற்றும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட உள்ளடக்கங்களை அகற்ற உத்தரவிட்டதுடன், ஸ்ருதி ஹாசனின் நற்பெயர், சமூக மதிப்பு மற்றும் வர்த்தக நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்காலப் பாதுகாப்பையும் வழங்கியுள்ளது.

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஒருவரின் முகம், குரல் மற்றும் தோற்றத்தை மிகத் துல்லியமாகப் பயன்படுத்தி போலியான உள்ளடக்கங்களை உருவாக்குவது எளிதாகியுள்ள நிலையில், ஸ்ருதி ஹாசன் தொடர்ந்துள்ள இந்த வழக்கு திரைத்துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஒருவரின் பிரபலத்தை காரணமாகக் கொண்டு, அவரது அனுமதியின்றி உருவம் அல்லது குரலைப் பயன்படுத்தி போலியான விளம்பரங்கள், வீடியோக்கள் அல்லது பிற டிஜிட்டல் உள்ளடக்கங்களை உருவாக்க முடியாது என்பதற்கான முக்கிய சட்டப் பார்வையாகவும் இந்த இடைக்கால உத்தரவு பார்க்கப்படுகிறது.

AI மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், தனிநபரின் சம்மதம், டிஜிட்டல் அடையாளப் பாதுகாப்பு மற்றும் தனிநபர் உரிமைகள் தொடர்பான எதிர்கால சட்ட விவாதங்களுக்கு இந்த வழக்கு முக்கிய முன்னுதாரணமாக அமையக்கூடும்.

Hindusthan Samachar / P YUVARAJ