Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச)
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வெல்லம் ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது.
தர்மபுரியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர், வேலூரில் உள்ள வெல்லம் மண்டிக்கு சரக்கு வாகனத்தில் வெல்லம் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி, சரக்கு வாகனத்தின் மீது உரசியதாக கூறப்படுகிறது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி, சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் சங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் விபத்துக்குள்ளான சரக்கு வாகனம் அப்புறப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ