Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லூர் , 07 செப்டம்பர் (ஹி.ச.)
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நெல்லூர் மாவட்டத்துக்கு வருகை தந்தார்.
வெங்கடாசலத்தில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற வெள்ளி விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நெல்லூர் வந்த அவரை ஆந்திர மாநில அமைச்சர்கள் பொங்குரு நாராயணா, ஒய்.சத்யகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அக்ஷரா வித்யாலயா பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டர் மூலம் யோகி ஆதித்யநாத் வந்து இறங்கினார்.
அவரை அமைச்சர்களுடன், முன்னாள் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடுவின் மகளும், ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான தீபா வெங்கட், அவரது மகன் ஹர்ஷவர்தன், சட்டமன்ற உறுப்பினர் சோமிரெட்டி சந்திரமோகன் ரெட்டி, மாநில பா.ஜ.க. தலைவர் பி.வி.என்.மாதவ், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் யோகி ஆதித்யநாத் அக்ஷரா வித்யாலயா வளாகத்தில் செயல்பட்டு வரும் சோமா தொழில்நுட்ப பயிற்சி மையத்தை பார்வையிட்டார். அங்கு பல்வேறு தொழில்நுட்பப் பயிற்சிகளை பெற்று வரும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், பயிற்சியின் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தி வரும் ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் பணிகளை யோகி ஆதித்யநாத் பாராட்டினார்.
அறக்கட்டளையின் சேவைப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவர்கள் நடத்திய ஸ்கேட்டிங் நிகழ்ச்சியை அவர் ஆர்வத்துடன் பார்வையிட்டார்.
முன்னாள் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடுவின் சிந்தனையில் 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்வர்ண பாரத் அறக்கட்டளை, கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி, கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த அறக்கட்டளை 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் ஒரு பகுதியாக யோகி ஆதித்யநாத் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெறும் பல்வேறு சேவைப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் மக்கள் மண்டபத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
யோகி ஆதித்யநாத்தின் வருகையை முன்னிட்டு நெல்லூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA