Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 07 செப்டம்பர் (ஹி.ச.)
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி இன்று இரவு 7 மணி அளவில் கோலாகலமாக நடைபெறுகிறது.
கீழை நாடுகளின் லூர்து நகரம் என்று போற்றப்படும் வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வரும் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர்.
திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக கருதப்படும் பெரிய தேர் பவனி இன்று மாலை நடைபெற உள்ளதால், வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
புனித ஆரோக்கிய மாதாவின் திருஉருவம் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளி, பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வருகிறது.
இதையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்வதற்காக நாகை மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, நாளை (செப்.8) ஆரோக்கிய அன்னை பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது.
பின்னர், மாலை 6 மணிக்கு கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவடைகிறது.
இதையொட்டி, நாகை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b