குளறுபடிக்கு இடமின்றி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - பேரவைத் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம்
சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.) சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எந்தவித குளறுபடிகளுக்கும் இடமளிக்காமல் முழுமையான துல்லியத்துடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தனிநபர் தீர்மானம் கொண்டு வருவதற்காக சட்டப்பேரவைத் தலைவரிடம் எதிர்க்கட்சித் தலைவர்
குளறுபடிக்கு இடமின்றி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - பேரவைத் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம்


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எந்தவித குளறுபடிகளுக்கும் இடமளிக்காமல் முழுமையான துல்லியத்துடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தனிநபர் தீர்மானம் கொண்டு வருவதற்காக சட்டப்பேரவைத் தலைவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம் அளித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

சமூக நீதியின் அடிப்படையாக விளங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் மத்திய அரசு கடைபிடிக்கும் அணுகுமுறை பெரும் ஏமாற்றம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்களே தாங்களாக முன்வந்து தங்கள் சாதியை தெரிவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, இந்த மாபெரும் பணியின் நோக்கத்தையே சிதைத்து விடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாங்களாகவே சாதியை சொல்லும் முறை என்பது தரவுகளில் பெரும் குழப்பத்தையும், தவறான புள்ளி விவரங்களையும் உருவாக்கும். இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகி விடும் என்பதால், இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தயாரிக்கும் போது மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்றும், மாநில அரசுகளுடன் முறையாக கலந்தாலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சமூக யதார்த்தங்களை புரிந்து கொண்டு பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பை வெளிப்படைத்தன்மையுடனும், அறிவியல் பூர்வமாகவும் நடத்துவதற்கு தமிழக சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b