Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 செப்டம்பர் (ஹி.ச.)
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் 100-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் எழுதிய செஞ்சுரி ஆஃப் சர்வீஸ் (Century of Service) என்ற புதிய நூல் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி டெல்லியில் வெளியிடப்பட உள்ளது.
டெல்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவர் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இந்நூலை வெளியிட உள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அந்த அமைப்பு சமூகத்திற்காக மேற்கொண்டுள்ள 100 குறிப்பிடத்தக்க சேவைத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பதிவு செய்யும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றியபோது, அவசரமாக ரத்தம் தேவைப்பட்ட நோயாளி ஒருவரைக் காப்பாற்றுவதற்காக திருச்சியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் உடனடியாக வந்து ரத்ததானம் செய்ததாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்வின் மூலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சேவை மனப்பான்மையை முதன்முதலில் நேரடியாக உணர்ந்ததாகவும், அந்த நினைவுகளை அடிப்படையாகக் கொண்டும், சமூகத்திற்காக அந்த அமைப்பு மேற்கொண்ட பல்வேறு சேவைகளைப் பதிவு செய்யும் நோக்கிலும் செஞ்சுரி ஆஃப் சர்வீஸ் நூலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ