பெண் எம்.எல்.ஏ.வின் சேலையை இழுத்தவர்களை விடமாட்டோம் -பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் ஹரிஷ் ராவ்
ஐதராபாத் , 07 செப்டம்பர் (ஹி.ச.) தெலுங்கானா சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, அத்துமீறி நடந்து கொண்டதாக அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹ
A


ஐதராபாத் , 07 செப்டம்பர் (ஹி.ச.)

தெலுங்கானா சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, அத்துமீறி நடந்து கொண்டதாக அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹரிஷ் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

பி.ஆர்.எஸ். உறுப்பினர்கள் சட்டசபைக்குள் நுழைய முடியாத வகையில் அவர்களை தடுக்கும் நோக்கில், முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ் ராவ் கூறியதாவது:-

கருப்பு டி-ஷர்ட்

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் போராட்ட வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை அணிந்து நாடாளுமன்றத்துக்கு சென்றபோது எந்த பிரச்சினையும் எழவில்லை. ஆனால், நாங்கள் சட்டசபைக்கு கருப்பு டி-ஷர்ட் அணிந்து வருவது மட்டும் ஏன் தவறாக பார்க்கப்படுகிறது?

அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கருப்பு டி-ஷர்ட் அணிந்து போராட்டம் நடத்துவது குற்றமா? ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு போராட்டம் நடத்துவதற்கான உரிமை இல்லையா?

கடும் கண்டனம்

சட்டசபை வளாகத்தில் எங்கள் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளிடம் போலீசார் மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சுனிதா லட்சுமாரெட்டியின் சேலையை போலீசார் இழுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியின் கழுத்தை நெரித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டியையும் போலீசார் கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பெண் எம்.எல்.ஏ.வின் சேலையை இழுத்த போலீஸ் அதிகாரிகள் எங்கு சென்றாலும் அவர்களை விடமாட்டோம். மக்கள் பிரதிநிதிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கருப்பு நாள்

தெலுங்கானா சட்டசபை வரலாற்றில் இன்றைய நாள் ஒரு கருப்பு நாளாக பதிவாகும். ஜனநாயகத்தின் முக்கியமான அமைப்பான சட்டசபை தற்போது கௌரவர்கள் சபையைப் போன்று மாறிவிட்டது.

பிரதான எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். உறுப்பினர்கள் சட்டசபைக்குள் வரக்கூடாது என்பதற்காக அரசு அடக்குமுறையை கையாளுகிறது. எதிர்க்கட்சி இல்லாத சட்டசபையை நடத்துவதற்கு அரசு முயற்சி செய்கிறது.

கே.டி.ஆர். காயம்

போராட்டத்தின்போது பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ஆர். கை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட போலீசார் அனுமதிக்கவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பி.ஆர்.எஸ். மக்கள் பிரதிநிதிகள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள் மற்றும் போலீசாரின் அத்துமீறல்களுக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி எதிர்காலத்தில் உரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு ஹரிஷ் ராவ் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA