ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ராஜினாமா!
காக்கிநாடா , 08 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காக்கிநாடா மாவட்டத்தில் கட்சியின் மூத்த
A


காக்கிநாடா , 08 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காக்கிநாடா மாவட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்சியின் மூத்த தலைவரும், ஜக்கம்பேட்டா சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான நெக்கண்டி சாய் பிரசாத், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுதொடர்பான தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பெத்தாபுரம் நகராட்சியின் முன்னாள் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ள சாய் பிரசாத், தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்காலம் குறித்த குழப்பம் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், சாய் பிரசாத்தை தொடர்ந்து காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்களைச் சேர்ந்த ஒய்சிபி கவுன்சிலர்கள் சிலரும் கட்சியில் இருந்து விலக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர்கள் விரைவில் கட்சிக்கு ராஜினாமா செய்துவிட்டு ஜனசேனா கட்சியில் இணையலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள் தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகவே ஒய்சிபியைச் சேர்ந்த சில கவுன்சிலர்கள் மாற்று அரசியல் பாதையை தேர்வு செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாய் பிரசாத்தின் ராஜினாமாவை தொடர்ந்து மேலும் சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் கட்சியை விட்டு வெளியேறினால், காக்கிநாடா மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பின்னடைவு ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA