Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச)
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அழைப்பைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிர்வாகக் குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள மாநிலத் தலைமையகத்தில் நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தனது கூட்டணியை விரிவுபடுத்தும் நோக்கில் ஆதரவு கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகளுடன் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை த.வெ.க. நிர்வாகிகள் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனை சந்தித்து வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பின்னணியில் தான் இன்றைய நிர்வாகக் குழு கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதா, இல்லையா என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
த.வெ.க.வுடனான அரசியல் அணுகுமுறை, தற்போதைய கூட்டணி நிலைப்பாடு மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b