Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
நாடு முழுவதும் உள்நாட்டு LPG சிலிண்டர் ரீஃபில் முன்பதிவு செய்வதற்கான இடைவெளி 25 நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து நுகர்வோருக்கும் இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலையடுத்து, LPG விநியோகத்தை சீராக நிர்வகிக்கும் வகையில் நகர்ப்புற நுகர்வோருக்கு 25 நாட்களும், கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாட்களும் சிலிண்டர் முன்பதிவு இடைவெளி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது நாட்டில் LPG விநியோக நிலைமை மேம்பட்டுள்ளதுடன், சிலிண்டர் முன்பதிவுக்கான நிலுவைகளும் கணிசமாக குறைந்துள்ளன. இதையடுத்து, கிராமப்புற நுகர்வோருக்கான 45 நாள் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் அனைத்து பகுதிகளிலும் 25 நாள் முன்பதிவு இடைவெளியை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் LPG விலை மற்றும் விநியோகத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நாட்டில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ