மதுராந்தகம் இடைத்தேர்தல் -அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை
செங்கல்பட்டு, 08 செப்டம்பர் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிந
மதுராந்தகம்


செங்கல்பட்டு, 08 செப்டம்பர் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், இடைத்தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டது.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் அமைத்தல், பிரசாரத்துக்கான அனுமதி பெறுதல் மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam