Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 08 செப்டம்பர் (ஹி.ச.)
கோவை துடியலூரில் கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில், ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’ வரும் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,
ஸ்ரீ வைஷ்ணவி கார்ஸ் உரிமையாளர் ராஜசேகர் வரவேற்புரையாற்றினார். அசைன் கார்ஸ் உரிமையாளர் அசைன் அலி தலைமை வகித்தார்.
அப்போது பேசிய கார் வியாபாரிகள்,
கோவை மாவட்ட கார் வியாபாரிகள் சங்கத்தின் ஒப்புதலுடன், 30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட முன்னணி நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த விற்பனைத் திருவிழாவை நடத்துவதாக தெரிவித்தனர்.
கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், துடியலூர் வி.ஜி. மருத்துவமனை எதிரே உள்ள மைதானத்தில் வரும் 10ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 14ஆம் தேதி திங்கட்கிழமை வரை தினமும் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த விற்பனைத் திருவிழாவில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரையிலான சிறிய பட்ஜெட் கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பயன்படுத்திய கார்கள் ஒரே இடத்தில் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக கண்காட்சி வளாகத்திலேயே உடனடி வங்கிக் கடன் மற்றும் வாகனக் காப்பீடு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய காரை கொடுத்து புதிய பயன்படுத்திய காரை வாங்கும் ‘எக்ஸ்சேஞ்ச்’ வசதியும் வழங்கப்பட உள்ளது.
கார் உதிரிபாகங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் வாகனங்களின் எதிர்கால பராமரிப்பு தேவைகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும் என கார் வியாபாரிகள் தெரிவித்தனர்.
விற்பனைக்கு வைக்கப்படும் கார்களின் ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, சங்கத்தின் உத்தரவாதத்துடன் நம்பகமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பட்ஜெட்டுக்கும் தேவைக்கும் ஏற்ற பயன்படுத்திய கார்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு, தங்களுக்கு பிடித்த காரை வாங்கிச் செல்லலாம் என கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் கே.பி.கே. மோட்டார்ஸ் கார்த்திக், ஐ.ஏ.ஜி. கார்ஸ் ராஜா, ரோட் மாஸ்டர் மணிகண்டன், ஆர்.ஆர். கார்ஸ் ராதாகிருஷ்ணன், விஜய் கார்ஸ் கோபி, ஜே.கே.கே. கார்ஸ் ஜெயராமன், சதீஷ்குமார் உள்ளிட்ட கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக எஸ்.கே. கார்ஷாப் உரிமையாளர் சஞ்சீவ்குமார் நன்றியுரையாற்றினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P