Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 நவம்பர் (ஹி.ச.)
எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடர்பாக பாஜக நிர்வாகி சரத்குமார், தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தாங்களாகவே முன்வந்து தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து காலம் தாழ்த்தாமல் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (நவ 20) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் திருத்தப்பணிகள் முழுமையாக நிறைவடைய அரசு, அதிகாரிகள், அரசியல் இயக்கங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
கடந்த நவம்பர் 4 ந்தேதி முதல் எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) வாக்காளர் திருத்தப் பட்டியலுக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் 94.74% விநியோகிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் அதே சமயத்தில் 13.02% படிவங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
டிசம்பர் 4 ந்தேதிக்குள்ளாக அதாவது இன்னும் 2 வாரங்களுக்குள் வாக்காளர் படிவங்கள் முழுமையாக நிரப்பப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ / ஆன்லைனிலோ சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அப்போது தான் டிசம்பர் 9 ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்கள் பெயர் இடம் பெறுவதை உறுதி செய்ய முடியும்.
எஸ்.ஐ.ஆர் படிவங்கள் திரும்பப்பெறும் பணி தொய்வாக நடைபெறுவதாக தெரிகிறது.
ஜனநாயக நாட்டில் வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை.
வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் குறித்த புரிதல், அவசியம் மற்றும் விழிப்புணர்வு முழுமையாக சென்றடைய தேர்தல் ஆணையமும், அரசும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி உதவ வேண்டும்.
எஸ்.ஐ.ஆர் படிவங்கள் திரும்பப்பெறும் பணியில், எந்தவொரு தகுதியான வாக்காளர்களும் பட்டியலில் விடுபடாத வகையிலும், புதிய வாக்காளர்கள் இணைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மின்சாரத்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைகள், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், தங்கள் அலுவலகத்திலே எஸ்.ஐ.ஆர் பணிக்காக சிலரை நியமித்து, அனைத்து தரப்பினரையும் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபடுத்தினால் படிவம் திரும்பப்பெறம் பணி 100% முழுமைபெறும்.
கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட உள்ளாட்சி, நகராட்சி மன்ற நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு தங்கள் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு படிவம் பூர்த்தி செய்திட உதவ வேண்டும்.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் சனி, ஞாயிறு என எதிர்வரும் வார இறுதி நாட்கள் 4 தினங்களும் அரசு ஆசிரியர்கள் முகாமிட்டு விண்ணப்ப விபரங்களை நேரிலோ, ஆன்லைனிலோ பூர்த்தி செய்து பொதுமக்களுக்கு உதவலாம்.
பெரும்பாலும் மக்களிடம் எஸ்.ஐ.ஆர் பணி குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ள காரணத்தால், எஸ்.ஐ.ஆர் திருத்த பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்திட தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் இந்த கோரிக்கையை பரிசீலித்து நடைமுறைப்படுத்தி 100% எஸ்.ஐ.ஆர் பணியை வெற்றியடையச் செய்திட வேண்டும்.
மேலும், பொதுமக்களும் தங்களது வாக்குகளை தவறவிடாமல், எஸ்.ஐ.ஆர் பணியில் ஆர்வம் காட்டாமல் இருப்பதை தவிர்த்து, தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தாங்களாகவே முன்வந்து தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து காலம் தாழ்த்தாமல் சமர்ப்பிக்கும்படி வேண்டுகோள் முன்வைக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b