Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 நவம்பர் (ஹி.ச.)
கரூர் துயர் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகள் ரோட் சோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று (நவ 27) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பார்க்கும் போது, ரோட்ஷோக்களுக்கு அனுமதி பெறுவது என்பது தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டிய நிலை போல் உள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? ஏற்கப்பட்டதா? என முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவும் எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் உள்ளது எனக் கூறி விசாரணையை இன்று
(நவ 28) ஒத்தி வைத்தனர்.
இன்றைய(நவ 28) வழக்கு விசாரணையில் தமிழக அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் மீது பரிந்துரைகளை வழங்குமாறு அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி அதிமுக, தவெக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பரிந்துரைகள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் கட்சிகள் அளித்துள்ள பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.
பின்னர் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கை ஒத்தி வைத்தது.
Hindusthan Samachar / vidya.b