Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 டிசம்பர் (ஹி.ச.)
2014ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் 23,926 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீன எல்லையில் எந்த ஊடுருவல் முயற்சியும் நடக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊடுருவல் தொடர்பாக லோக்சபாவில் திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக வழங்கிய அறிக்கையில்;
இந்திய எல்லையை ஒட்டியுள்ள அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் இருந்து, 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை, 20,806 பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தாண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையில் 3,120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதிகபட்சமாக இந்தியா - வங்கதேசத்தில் இருந்து 18,851 பேர் ஊடுருவ முயன்றுள்ளனர்.
மியான்மரில் இருந்து 1,165 பேரும், பாகிஸ்தானில் இருந்து 556 பேரும், நேபாளம் - பூடானில் இருந்து 234 பேரும் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று கைதாகியுள்ளனர்.
இதன் மூலம், இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைப்பகுதிகளில் ஊடுருவல் முயற்சிகள் அதிகளவில் இருப்பதை இந்தப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அதே வேளையில், வடக்கே சீனாவுடனான எல்லையில் ஊடுருவல் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.
2025ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையில் இந்தியா - வங்கதேச எல்லைப் பகுதியில் 2,556 பேர் ஊடுருவ முயன்று கைதாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 49 பேரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சிறை பிடித்துள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானுடனான எல்லையில் 93 சதவீதம் பகுதிகளும், வங்கதேசத்துடனான எல்லையில் 80 சதவீதம் பகுதிகளிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM