Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 டிசம்பர் (ஹி.ச)
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள், பயணத்தின் போது செல்போன் பேசிக் கொண்டு பேருந்தை இயக்கக் கூடாது எனக் கடுமையான சுற்றறிக்கையை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில்,பேருந்து விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், சில ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்கிய சம்பவங்கள் கண்டறியப்பட்டதாகவும், இது பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராக்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்துவதால் கவனச் சிதறல் ஏற்பட்டு, சாலை விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், இனிமேல் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் போது செல்போனை நடத்துனரிடம் கொடுத்து வைக்கவும், பணி முடிந்த பிறகே செல்போனை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் ஓட்டுநர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், செல்போன் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக வாகனம் இயக்குவது குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ