Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 30 டிசம்பர் (ஹி.ச.)
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வரும் அதீத பனிமூட்டம் மற்றும் கடும் குளிர் காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு எச்சரிக்கையை தற்போது சிவப்பு எச்சரிக்கையாக மாற்றியுள்ளது.
டெல்லியில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு வரவேண்டிய 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் கடும் பனிமூட்டத்தால் நீண்ட நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன. ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் தவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாகச் செல்லுமாறு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இன்று
(டிசம்பர் 30) மொத்தமாக 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
60 விமானங்களின் புறப்பாடு மற்றும் 58 விமானங்களின் வருகை என மொத்தம் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களின் விமான சேவை ரத்துசெய்யப்பட்டன.
வானிலை சற்று சீரான பிறகு படிப்படியாக விமான சேவைகள் இயக்கப்படும் என டெல்லி விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானப் பயணிகள் தங்களின் பயண நேரத்தை உறுதி செய்துகொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b