Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.)
டிட்வா புயலின் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பாக நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 20 செ.மீ-க்கு அதிகமான மழை பதிவாகி, அங்கிருந்த பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. அதனைத் தொடர்ந்து, இந்த புயல் வடதமிழகத்தை நோக்கி வரும்போது அதன் தன்மை வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தாலும், இந்தச் சுழற்சி சென்னை அருகே 50 கிலோமீட்டர் தொலைவில் கிட்டத்தட்ட 30 மணி நேரம் ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக கனமழை பதிவானது.
சில இடங்களில் அதி கனமழையும் பதிவானது. இந்த நிலையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய மூன்று நாட்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 4, 2025 தேதியான நேற்று பகல் நேரங்களில் சில இடங்களில் அவ்வப்போது கனமழை இருந்தாலும், அதன் பிறகு மழையின் தீவிரம் குறைந்தது.
இந்த சூழலில் டிசம்பர் 5, 2025 தேதியான இன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் அவ்வப்போது மிதமான மழை பதிவாகக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது சமூக வலைதள பதிவில், “இன்று ஒரு நாள் மட்டுமே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளி கிடைக்கும். அதே சமயத்தில் தேனி, கடலூர், புதுவை, விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் புற மாவட்டங்களிலும் மிதமான மழை பதிவாகும். எனவே மக்கள் அனைவரும் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். கிழக்குத் திசை காற்று தமிழகத்தை நோக்கி நகரும் பொழுது டிசம்பர் 9 அல்லது 10ஆம் தேதி தமிழகத்தில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இந்த மழையிலிருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பதிவாகுமா என்பது உறுதி இல்லை; பதிவாகவில்லை என்றால், இது மேலும் ஒரு நீண்ட இடைவெளியை உருவாக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN