சென்னையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மகாராஷ்டிர கொள்ளையனின் சொந்த ஊரில் பாதுகாப்பு அதிகரிப்பு
மகாராஷ்டிரா, 28 மார்ச் (ஹி.ச.) சென்னையில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிர கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் இரானியின் சொந்த ஊரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 25-ம் தேதி காலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து 6 இடங்
கொள்ளையன்


மகாராஷ்டிரா, 28 மார்ச் (ஹி.ச.)

சென்னையில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிர கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் இரானியின் சொந்த ஊரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 25-ம் தேதி காலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து 6 இடங்களில் வழிப்பறி நடைபெற்றது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த ஜாபர் குலாம் உசேன் இரானி, அவரது கூட்டளிகள் சல்மான் உசேன் இரானி, மிசம்சா மேசம் இரானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருடிய நகைகள், திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை மீட்க 3 பேரும் சென்னை தரமணி பகுதிக்கு கடந்த 26-ம் தேதி அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது பைக்கில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீஸார் மீது ஜாபர் குலாம் உசேன் இரானி 2 முறை சுட்டார். போலீஸார் தற்காப்புக்கு சுட்டபோது அவர் உயிரிழந்தார். இதன்காரணமாக இரானியின் சொந்த ஊரான மகாராஷ்டிராவின் ஆம்பிவளி பகுதியின் பாட்டீல் நகரில் பதற்றம் எழுந்திருக்கிறது. அந்த பகுதியில் மகாராஷ்டிர போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து மகாராஷ்டிர போலீஸார் கூறியதாவது:

மகாராஷ்டிராவின் கல்யாண் அருகேயுள்ள ஆம்பிவளி பகுதி திருடர்கள், கொள்ளையர்களின் கூடாரமாக கருதப்படுகிறது. மும்பை உட்பட மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் நடைபெறும் 60 சதவீத திருட்டுகளில் ஆம்பிவளி பகுதி கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கிறது.

இந்த பகுதி கொள்ளையர்களை கைது செய்வது கடினம். போலீஸார் கைது செய்ய சென்றால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்படும். பெண்கள் ஒன்றுகூடி பெரும் போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.

கடந்த 2009-ம் ஆண்டில் ஒரு திருடனை பிடிக்க மகாராஷ்டிர போலீஸார் ஆம்பிவளி பகுதிக்கு சென்றனர். அப்போது போலீஸார் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸார் தற்காப்புக்காக சுட்டபோது 2 பேர் உயிரிழந்தனர். 5 போலீஸார் படுகாயம் அடைந்தனர்.

கடந்த 2015 ஜூலையில் ஆம்பிவளி பகுதியில் போலீஸார் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் 2 போலீஸார் படுகாயம் அடைந்தனர். கடந்த 2027 ஏப்ரலில் 2 திருடர்களை பிடிக்க 25 போலீஸார் ஆம்பிவளிக்கு சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள் போலீஸார் மீது மண்எண்ணெயை ஊற்றினர். அவர்களை தீ வைத்து எரித்துவிடுவதாக மிரட்டினர். இதனால் போலீஸார் வெறுங்கையோடு திரும்பினர். திருடர்களை பிடிக்க முடியவில்லை.

கடந்த 2023 ஏப்ரலில் வழிப்பறி திருடனை பிடிக்க சென்ற போலீஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த டிசம்பரில் செயின்பறிப்பு திருடனை பிடிக்க சென்ற மும்பை போலீஸார் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 போலீஸார் படுகாயம் அடைந்தனர்.

தற்போது சென்னை போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ஆம்பிவளி பகுதியை சேர்ந்த ஜாபர் குலாம் உசேன் இரானி சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இதனால் பதற்றமான சூழல் எழுந்திருக்கிறது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட ஆம்பிவளி பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு மகாராஷ்டிர போலீஸார் தெரிவித்தனர்.

மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதி போலீஸ் டிசிபி அதுல் கூறும்போது,

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ஜாபர் குலாம் உசேன் இரானி மீது 8 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையான அவர், பல்வேறு மாநிலங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளார். அவர் ஒரு கும்பலின் தலைவராக செயல்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / Durai.J