விஜயகாந்த் மகன் நடிப்பில் ‘ரமணா 2’ - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு
சென்னை , 18 மே (ஹி.ச.) மறைந்த தேமுதிக முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘படை தலைவன்’ அறிமுக இயக்குநர் யு.அன்பு இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சென்
விஜயகாந்த் மகன் நடிப்பில் ‘ரமணா 2’


சென்னை , 18 மே (ஹி.ச.)

மறைந்த தேமுதிக முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘படை தலைவன்’

அறிமுக இயக்குநர் யு.அன்பு இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்,

ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த் தான். அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும், அதை விஜயகாந்த் சார் அவர்கள் செய்தார்கள். எல்லோரும் விஜயகாந்த் குறித்துப் பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் உடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாகக் கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது.

விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களைக் கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள்... கண்டிப்பாக ரமணா 2படம் எடுக்கலாம். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். என்றார்.

பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,

அரசியல் மேடை இல்லாமல் ஒரு சினிமா சார்ந்த மேடையில் நான் பேசுவது இதுவே முதல்முறை. சண்முக பாண்டியனை இனிமேல் உங்களிடம் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடமும், சினிமா துறை சார்ந்தவர்களிடமும் ஒப்படைக்கிறேன். கள்ளழகர் படத்தில் நடித்த போது, கேப்டன் யானையோடு நெருக்கமாக பழகி, வீட்டிற்கு யானையை அழைத்து வரவா? என்று கேட்டார், அவ்வளவு பெரிய வீடு இல்லையே என்று கூறினேன். அதேபோன்று தான் சண்முக பாண்டியனும், தற்போது அவருடன் நடித்த மணியன் யானையை வீட்டிற்கு அழைத்து வரக் கேட்டார். இருவரும் யானை வளர்க்கவே விரும்புகின்றனர். நிச்சயம் ஒரு யானையை வளர்ப்போம். கேப்டனின் இடத்தை எனது இரண்டு மகன்களும் நிரப்புவார்கள். விஜய பிரபாகரன் அரசியலிலும், சண்முக பாண்டியன் சினிமாவிலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்வார்கள். அதில் எந்த ஐயமும் இல்லை இப்படம் மக்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி. என்றார்.

விஜே கம்பைன்ஸ் மற்றும் தாஸ் பிக்சர்ஸ் வழங்க, ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இளையராஜாவின் இசையமப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ’படை தலைவன்’ வரும் மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Hindusthan Samachar / J. Sukumar