Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 20 மே (ஹி.ச.)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரானா விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த சில நாட்களாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், நேற்று இரவு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திருமணம் குறித்து நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘யோகிடா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஷால், நான் சாய் தன்ஷிகாவை உண்மையாக காதலிக்கிறேன், அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், என்று அறிவித்தார்.
முன்னதாக பேசிய சாய் தன்ஷிகா,
நானும் என் பேபி விஷாலும் திருமணம் செய்து கொள்ள போகிறோம். 15 வருடங்களாக அவரை எனக்கு தெரியும். பல நேரங்களில் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். சமீபகாலமாக நாங்கள் நெருக்கமாக, நட்பாக பழகினாலும், இருவருக்குள்ளும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது. விஷாலை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன், என்று தெரிவித்தார்.
திருமணத்திற்குப் பிறகு சாய் தன்ஷிகா நிச்சயம் நடிப்பார், என்று அறிவித்த விஷால், ஒரு பெண்ணின் திறமையை முடக்குவது நல்லதல்ல, தன்ஷிகா திறமையானவர், அவரது திறமையை ஊக்குவிப்பேனே தவிர எந்த நேரத்திலும் தடுக்க மாட்டேன். அதனால் அவர் தொடர்ந்து நடிப்பார், என்று தெரிவித்தார்.
விஷால் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதற்குள் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு, அங்கே தான் தனது திருமணம் நடைபெறும் என்றும் விஷால் தெரிவித்தார்.
Hindusthan Samachar / J. Sukumar