வீட்டு உரிமையாளரிடம் ரூ.97 லட்சம் மோசடி - பைனான்சியர் கைது!
சென்னை , 30 மே (ஹி.ச.) சென்னை பெரம்பூர் ராஜவேலு தெருவில் வசித்து வருபவர் ஹேமமாலினி (56). இவருக்குச் சொந்தமாக காரப்பாக்கம் தென்றல் நகரில் வீடு உள்ளது. அந்த வீட்டை சுபாஷ் சந்த் ஜெயின் என்பவரிடம் அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாயை வட்டிக்கு வாங்கியிருந்தா
வீட்டு உரிமையாளரிடம் ரூ.97 லட்சம் மோசடி செய்த பைனான்சியர் கைது


சென்னை , 30 மே (ஹி.ச.)

சென்னை பெரம்பூர் ராஜவேலு தெருவில் வசித்து வருபவர் ஹேமமாலினி (56). இவருக்குச் சொந்தமாக காரப்பாக்கம் தென்றல் நகரில் வீடு உள்ளது. அந்த வீட்டை சுபாஷ் சந்த் ஜெயின் என்பவரிடம் அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாயை வட்டிக்கு வாங்கியிருந்தார் ஹேமமாலினி.

பின்னர் பணத்தேவைக்காக அந்தக் குடியிருப்பை ஹேமமாலினி விற்க முடிவு செய்தபோது, அந்த வீட்டை சுபாஷ் சந்த் ஜெயினை வாங்கிக் கொள்வதாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த வீட்டின் விலை 1.6 கோடி ரூபாய் எனப் பேசி முடிக்கப்பட்டுள்ளது. தன்னிடம் ஹேமமாலினி வாங்கிய கடன், அதற்குரிய வட்டி எனக் கணக்கு பார்த்த சுபாஷ் சந்த் ஜெயின், 97 லட்சம் ரூபாயைக் கொடுத்து வீட்டை வாங்கிக் கொள்வதாக ஹேமமாலினியிடம் உறுதி அளித்திருக்கிறார்.

அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் வீட்டை சுபாஷ் சந்த் ஜெயினின் மனைவி பெயருக்கு ஹேமமாலினி கிரையம் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் வாக்குறுதி அளித்தபடி 97 லட்சம் ரூபாயை சுபாஷ் சந்த் ஜெயின், ஹேமமாலினியிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார்.

இதுதொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் ஹேமமாலினி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி அயனாவரத்தைச் சேர்ந்த ஃபைனான்ஸியர் சுபாஷ் சந்த் ஜெயினைக் கைது செய்தனர்.

அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர் மீது ஏற்கெனவே சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவில் கந்துவட்டி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுபாஷ் சந்த் ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டார்.

Hindusthan Samachar / J. Sukumar