Enter your Email Address to subscribe to our newsletters
திஷ்பூர் , 31 மே (ஹி.ச.)
இந்தியா முழுவதும் பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பல மாநிலங்களில் தொடர் கனமழையால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா முதல் வடகிழக்கு வரை, பல மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மிசோரமில் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அங்கு லாங்ட்லாய் நகரில் குறைந்தது மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. மாநிலம் முழுவதும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வாலில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் இறந்தார், மற்றொருவர் காயமடைந்தார், அதே நேரத்தில் ஐஸ்வால் மற்றும் சாம்பாய் மாவட்டங்களில் பல வீடுகள் சேதமடைந்ததோடு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
திரிபுராவில், 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்ததால் 57 குடும்பங்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டன. இதற்கிடையில், மேகாலயாவில் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. நிலச்சரிவில் ஒரு பெண் இறந்ததாகவும், ஒரு ஆண் நீரில் மூழ்கி இறந்ததாகவும், ஒரு இளைஞர் மரம் விழுந்து இறந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 25 கிராமங்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அசாம் மாநிலம் முழுவதும் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு குவஹாத்தி போன்ற நகரங்களில் திடீர் வெள்ளம் மற்றும் கடுமையான நீர் தேக்கம் மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.
Hindusthan Samachar / J. Sukumar