Enter your Email Address to subscribe to our newsletters
வேலூர், 1 ஜூன் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தை சேர்ந்த நிவேதாவிற்கு கடந்த 24-ஆம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து நிவேதா, குழந்தையுடன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
குழந்தையின் கையில் குளுக்கோஸ் மற்றும் மருந்து செலுத்துவதற்காக போடப்பட்டிருந்த ஊசியை செவிலியர்கள் மாற்ற முயன்றுள்ளனர். ஊசி ஒட்டப்பட்டிருந்த டேப்பை கையால் அகற்றாமல், கத்தரிக்கோல் கொண்டு நீக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை செலியர் ஒருவர் வெட்டியுள்ளனர். விரல் வெட்டுப்பட்டதால் குழந்தை வலியால் கதறியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் செவிலியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவமனைக்கு வந்த குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தினர். குழந்தையின் கையில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்வதற்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், குழந்தையின் விரலை துண்டித்த செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றம் செய்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Hindusthan Samachar / B. JANAKIRAM