Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 5 ஜூலை (ஹி.ச.)
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவையொட்டி அவருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் கவிஞர்களில் ஒருவரும், தமிழறிஞரும், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனருமான அய்யா பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரும் அடைகிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அவரது கவிதைகள் தமிழர் ஒற்றுமையையும், உரிமைகளையும் உயர்த்திப் பிடித்து, தமிழ்நாட்டின் பண்பாட்டு விழுமியங்களை உலக அரங்கில் எடுத்துரைத்தன.
அவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்திற்கு புதிய பரிமாணத்தை வழங்கின. அவரது தலைமையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து, தமிழ் மொழியின் பெருமையைப் பரப்பியது. பெருங்கவிக்கோ அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது படைப்புகளும், தமிழுக்காக அவர் ஆற்றிய பணிகளும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, இறுதி வணக்கத்தைச் செலுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்
Hindusthan Samachar / YUVARAJ P