Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 8 ஜூலை (ஹி.ச.)
சென்னை மாவட்டத்தில் அடையாறு மண்டலம், 178வது வார்டு சேஷாத்ரிபுரம் பிரதான சாலை, 300 மீட்டர் நீளம், 40 அடி அகலம் கொண்டது. வேளச்சேரியின் ஒரு பகுதி மக்கள், இந்த சாலை வழியாக பெருங்குடி, தரமணி ரயில் நிலையம் செல்கின்றனர்.
இந்த சாலையை ஒட்டியுள்ள, 3 ஏக்கர் தனியார் இடத்தில், அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக, தரைத்தளத்தில் இருந்து, 60 அடி ஆழத்தில் அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ராட்சத இயந்திரம் கொண்டு பள்ளம் எடுத்து, இடிக்கும் பணி நடைபெறுகிறது. இதில் ஏற்பட்ட அதிர்வால், சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில், லேசான விரிசல் ஏற்பட்டது. சாலையின் பாதி அளவு விரிசல் விழுந்து, சாய்வாக உள்வாங்கியது. இதனால், பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, தடுப்பு அமைத்து, வாகனங்கள்செல்ல முடியாத அளவுக்கு, வேளச்சேரி போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தனர். இப்பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்திற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் தெற்கு வட்டார துணை கமிஷனர் அதாப் ரசூல், அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
சாலையில் விரிசல் ஏற்பட காரணம், கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் விதிமீறல் நடந்ததா என விசாரித்தனர்.
பின், சாலையை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b