டாக்டர் டி. எஸ். சௌந்தரம் வாழ்க்கை வரலாறு!
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) இந்தியாவின் தலைசிறந்த மருத்துவரும், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும், சமூக சீர்திருத்தவாதியுமான மறைந்த டாக்டர்.டி.எஸ்.செளந்தரம் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம், பிறப்
டாக்டர் டி. எஸ். சௌந்தரம் வாழ்க்கை வரலாறு


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

இந்தியாவின் தலைசிறந்த மருத்துவரும், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும், சமூக சீர்திருத்தவாதியுமான மறைந்த டாக்டர்.டி.எஸ்.செளந்தரம் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்,

பிறப்பு மற்றும் கல்வி:

டி. எஸ். சௌந்தரம் (ஆகஸ்ட் 18, 1904 - அக்டோபர் 21, 1984) தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியில் டி. வி. சுந்தரம் அய்யங்கார் மற்றும் லட்சுமி அம்மாளுக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை டி. வி. எஸ். குழுமத்தின் நிறுவனர். திருக்குறுங்குடியில் ஆரம்பக் கல்வி பயின்ற சௌந்தரம், முத்தையா பாகவதரிடம் வீணை இசை கற்று, பத்து வயதில் வாய்ப்பாட்டு மற்றும் வீணையில் தேர்ச்சி பெற்றார். 1928இல் தில்லி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று, 1936இல் மருத்துவராகப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் மகளிர் நோய் மற்றும் மகப்பேறியல் துறையில் தங்கப் பதக்கம் வென்றார்

தனி வாழ்க்கை :

12 வயதில் டாக்டர் சுந்தரராஜனை மணந்தார். ஆனால், பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்த அவரது கணவர், அந்நோயால் உயிரிழந்தார். அவரது இறுதி விருப்பப்படி, சௌந்தரம் மருத்துவம் பயின்று மதுரையில் இலவச மருத்துவமனை தொடங்கினார். 1940-இல், காந்தியின் சீடரான ஜி. ராமச்சந்திரனை, காந்தி முன்னிலையில் சீர்திருத்த முறையில் மறுமணம் செய்தார். இந்த கலப்பு மற்றும் விதவை மறுமணம் அக்காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விடுதலைப் போராட்டம் மற்றும் அரசியல் :

காந்திய வழியில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். அந்நியத் துணி எதிர்ப்பு இயக்கத்தில் பெண்களை ஒருங்கிணைத்தார். 1952-இல் திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, சென்னை மாகாண உறுப்பினரானார். 1957-இல் வேடசந்தூர் தொகுதியிலும் வெற்றி பெற்றார். 1962-இல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் மத்திய கல்வித்துறை துணை அமைச்சராகப் பணியாற்றினார். பெண்களின் திருமண வயதை 18 ஆக உயர்த்தும் சட்டத்தை நிறைவேற்றினார். 1967-இல் தேர்தல் தோல்விக்குப் பின் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, சமூகப் பணிகளில் ஈடுபட்டார்.

சமூகப் பணிகள் :

காந்தியின் அரிஜன் இயக்கத்தில் இணைந்து, பெண்கள், குழந்தைகள், பட்டியலின மக்கள் மற்றும் கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றினார். மதுரையில் விதவைகளுக்கான மீனாட்சி விடுதி, சென்னையில் அவ்வை இல்லம் மற்றும் நல்வாழ்வு மையத்தை நிறுவினார். கஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் தென்னிந்தியப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

காந்திகிராமம் :

1947இல் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் காந்தி கிராம அறக்கட்டளையை நிறுவினார், இது 1976இல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமாக மாறியது. காந்தியின் ‘நை தாலிம்’ கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம், கல்வி, சுகாதாரம், குடும்பநலன் மற்றும் கைத்தொழிலை மேம்படுத்தியது. கஸ்தூரிபாய் மருத்துவமனையையும் நிறுவினார். 1980 முதல் 1984 வரை துணைவேந்தராகப் பணியாற்றினார்.

விருதுகள் :

1962இல் பத்ம பூஷண் விருது பெற்றார். 2005இல் இந்திய அரசு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது. கஸ்தூரிபாய் மருத்துவமனை 1971இல் தேசிய விருது பெற்றது.

மறைவு :

டி. எஸ். சௌந்தரம் அக்டோபர் 21, 1984இல் காலமானார். அவரது கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டு, பார்வையிழந்தவருக்கு பயன்பட்டது.

டாக்டர் டி. எஸ். சௌந்தரம் ஒரு மருத்துவர், காந்தியவாதி, சமூக சீர்திருத்தவாதி மற்றும் கல்வியாளராக, பெண்கள் மற்றும் கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்.

காந்திகிராம பல்கலைக்கழகம் மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனை போன்றவை அவரது பங்களிப்பின் நிரந்தர அடையாளங்களாக விளங்குகின்றன.

Hindusthan Samachar / J. Sukumar