Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை,20 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சியில் உள்ள சில மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மாநகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில், மாநகராட்சிப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்தி, தூய்மைப் பணிகளைச் செய்வதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
மேலும், தற்போதைய ஒப்பந்தப் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,
மாநகராட்சிப் பணிகளைத் திறம்படச் செய்வதற்குத் தனியார் நிறுவனங்களை நியமிக்க மாநகராட்சிக்கு அதிகாரம் உண்டு.
மாநகராட்சியின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஏற்கனவே 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தார்.
மேலும், இந்த ஒப்பந்தம் தற்காலிகமானது தான். பணியாளர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் பணிப் பாதுகாப்பு வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்படும் என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்தத் தீர்ப்பின் காரணமாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் பணிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / J. Sukumar