Enter your Email Address to subscribe to our newsletters

விசாகப்பட்டினம், 29 ஜனவரி (ஹி.ச.)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக கான்வே டிம் சீபராட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடினர். தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த நிலையில், கான்வே 44 ரன்களில் வெளியேறினார்.பின்னர் ரச்சின் ரவீந்திரா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மறுபுறம் சிறப்பாக விளையாடி டிம் சீபாராட் அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்களில் வெளியேறினார். பின்னர் கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்சேல் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 215 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் 8 ரன்களும் , சஞ்சு சமசன் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ரிங்கு சிங் சிறப்பாக விளையாடி 39 ரன்கள் எடுத்தார்.
மறுபுறம் போராடிய ஷிவம் துபே அரைசதமடித்து 65 ரன்களில் வெளியேறினார். இறுதியில் 18.4 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது.
இதன் மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
Hindusthan Samachar / JANAKI RAM