Enter your Email Address to subscribe to our newsletters

டாக்கா, 6 ஜனவரி (ஹி.ச.)
2026 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது.
இந்த கிரிக்கெட் தொடருக்கான மின் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.
அதே வேளை, வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் இந்து மதத்தினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வங்காளதேச வீரர் முஷ்தபிசுர் ரகுமான் பங்கேற்க பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பிசிசிஐ கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணி விடுவித்தது.
இதனால், ஆத்திரமடைந்த வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளது. தங்கள் அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசி-யிடம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்காளதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
மேலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவும் காலவரையற்ற தடை விதித்து வங்காளதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM