Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 7 ஜனவரி (ஹி.ச.)
டெல்லி ராம்லீலா திடலுக்கு அருகே மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து மசூதி கட்டப்பட்டுள்ளதால், அதனை இடிக்க முற்பட்டபோது மூண்ட வன்முறையில் 5 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.
அதிகாலையில் மசூதி இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால், வன்முறை ஏற்பட்டது.
டெல்லி ராம்லீலா திடலுக்கு அருகேவுள்ள துர்க்மான் கேட் பகுதியில் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மசூதி மற்றும் கல்லறையை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சையத் ஃபயஸ் இலாஹி மசூதியை இடிக்க முற்பட்டபோது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் காவலர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
எனினும் சிறிது நேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதற்றமான சூழலை கருத்தில்கொண்டு அப்பகுதியைச் சுற்றிலும் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், உள்ளூர் மக்களுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM