Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 09 ஜனவரி (ஹி.ச.)
கேரள மாநிலத்தில் உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் மகரஜோதி விழா ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மகரஜோதியன்று சன்னிதானத்தை சுற்றி பூ அலங்காரம் செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பெங்களூருவில் இருந்து மணம் இல்லாத வண்ண பூக்கள் வரவழைக்கப்பட்டு அலங்கரிக்கப்படும்.
அவ்வகை பூக்களை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கமான ரோஜா, மல்லிகை, துளசி உள்ளிட்ட பாரம்பரிய பூக்களும், குருத்தோலைகளும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகரஜோதியன்று சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.
ஜனவரி 14 ஆம் தேதி சன்னிதானம் எஸ். பி. யாக சுஜித் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ. க்கள், கமாண்டோ படையினர், மத்திய அதிவிரைவு படையினர், மத்திய பேரழிவு நிவாரண படையினர் உட்பட 2500 பேர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகரஜோதிக்கு முந்தைய நாள் 13-ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும், 14-ம் தேதி 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
12 முதல் 14-ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் கிடையாது. விருச்சுவல் கியூவில் முன்பதிவு செய்யாத எவரையும் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்க முடியாது என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
இனிவரும் நாட்களில் சன்னிதானம் வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்து உடனடியாக ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகரஜோதி தெரியும் இடங்களை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இங்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
Hindusthan Samachar / vidya.b