'சோமநாத் சுவாபிமான் பர்வ்' நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்
புதுடெல்லி, 09 ஜனவரி (ஹி.ச.) குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலில் நடைபெறவுள்ள ''சோமநாத் சுவாபிமான் பர்வ்'' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜனவரி 10) குஜராத் பயணம் மேற்கொள்கிறார். சோமநாதர் கோயிலைப் பாதுகாப்பதில் தங
'சோமநாத் சுவாபிமான் பர்வ்' நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்


புதுடெல்லி, 09 ஜனவரி (ஹி.ச.)

குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலில் நடைபெறவுள்ள 'சோமநாத் சுவாபிமான் பர்வ்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜனவரி 10) குஜராத் பயணம் மேற்கொள்கிறார்.

சோமநாதர் கோயிலைப் பாதுகாப்பதில் தங்கள் வீரத்தைக் காட்டிய தலைமுறை தலைமுறையான இந்தியர்களின் தியாகங்களைக் கௌரவிக்கும் வகையில், ஜனவரி 8 முதல் 11 வரை 'சோமநாத் சுவாபிமான் பர்வ்' நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சி, 1026 ஆம் ஆண்டில் கஜினி முகமதுவால் சோமநாதர் கோயில் படையெடுக்கப்பட்டதன் ஆயிரம் ஆண்டுகளைக் குறிக்கிறது. பல நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், இந்தக் கோயில் நம்பிக்கை, மனவுறுதி மற்றும் தேசியப் பெருமையின் சக்திவாய்ந்த சின்னமாகத் திகழ்கிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு, சர்தார் படேலின் தலைமையில் சோமநாதர் கோயிலின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் புனரமைப்புப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 1951 ஆம் ஆண்டில், அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் புனரமைக்கப்பட்ட கோயில் பக்தர்களுக்காக முறைப்படி திறக்கப்பட்டது.

இந்த பர்வ் நிகழ்ச்சியில், நாடு முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான துறவிகள் பங்கேற்கின்றனர். மேலும், கோயில் வளாகத்திற்குள் 72 மணி நேரம் தொடர்ச்சியாக 'ஓம்' மந்திரம் உச்சரிக்கப்படும்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பிரதமர் மோடி ஜனவரி 10 ஆம் தேதி இரவு 8 மணியளவில் சோமநாதர் கோயிலில் நடைபெறும் ஓம்கார மந்திர உச்சரிப்பில் பங்கேற்று தனது நிகழ்ச்சிகளைத் தொடங்குகிறார். இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலையில் கோயிலில் ட்ரோன் நிகழ்ச்சி நடைபெறும்.

ஜனவரி 11 ஆம் தேதி, பிரதமர் காலை 9:45 மணியளவில் நடைபெறும் சௌரிய யாத்திரையில் பங்கேற்கிறார். பல நூற்றாண்டுகளாக சோமநாதர் கோயிலைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த எண்ணற்ற வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்தச் சடங்கு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில், வீரம், தியாகம் மற்றும் மனவுறுதியைப் பிரதிபலிக்கும் வகையில் 108 குதிரைகள் பங்கேற்கும் ஒரு குறியீட்டு ஊர்வலம் இடம்பெறும்.

சௌரிய யாத்திரையைத் தொடர்ந்து, பிரதமர் மோடி காலை 10:15 மணியளவில் புகழ்பெற்ற சோமநாதர் கோயிலில் தரிசனம் செய்து பூஜைகள் செய்கிறார். பின்னர், காலை 11 மணியளவில் சோமநாதரில் நடைபெறும் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

சோமநாத் சுவாபிமான் பர்வ் நிகழ்ச்சியில் பிரதமரின் பங்கேற்பு, இந்தியாவின் நாகரிகத்தின் நீடித்த உணர்வை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும், நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் கொண்டாடுவதிலும் அவருக்குள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b